பாடும் நிலா பாலு(எஸ். பி. பாலசுப்ரமணியம்) காலமானார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். இந்த தகவல் அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினர்.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி 'சிகரம்' தொட்டவர் ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் எனும் எஸ்.பி.பி. சினிமாவில் 'பாலு' என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது. கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.,23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது. ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது. பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள் என சிகரம் தொட்டவர் எஸ்.பி.பி.,. ராகங்கள் பதினாறு, அதில் எஸ்.பி.பி., எனும் மூன்றெழுத்து குரல் இல்லாமல் இருக்காது. அந்தளவுக்கு தேன் கலந்த தனது குரலால் ரசிகர்களை மயக்கி தாலாட்டி வைத்தவர், இப்போது நிரந்தரமாக தூங்க சென்றுவிட்டார். இந்த பாடும் நிலா மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் மங்காமல் ஒலித்து கொண்டே இருக்கும். மருத்துவமனையில் நிருபர்களை சந்தித்த எஸ்.பி.பி., மகன் எஸ்.பி.சரண் கூறியதாவது: சரியாக 1:04 மணிக்கு உயிர்பிரிந்தது. எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, எஸ்பிபியின் பாடல்கள் இருக்கும் வரை அவரது பெயர் நிலைத்திருக்கும் எனக்கூறினார். அவரது ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி - தினமலர் |
இசை உலகில் முக்கியமானதொரு இழப்பு. அவரின் வெற்றிடத்தை நிரப்புவது கடினமே. பல கதாநாயகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். என்றும் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். நன்றிகள் SPB.
|
மிகப்பெரிய இழப்பு! மேதை அவர்....! இனிமையான குரல். அனாயாசமாக பாடும் பாங்கு!
ஓடிக்கொண்டே...மூச்சு விடாமல் பாடும் பாடல் இன்னும் நினைவில் இருக்கு ! பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்..... யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்.... நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர் கதையாகும்.... (வைரமுத்து) மௌனி |
இசையுலகின் மிகப்பெரிய இழப்பு
|
எழுபதுகளிலும் என்பதுகளிலும் என்னற்ற மனதில் நிற்கும் பாடல்களைப் பாடிய அவரை எப்போதும் மறக்க முடியாது. அவரை இருந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
பள்ளிக் காலம் முதல் இன்று வரை இளையராஜாவால் இசையமைத்து எஸ்பிபி பாடிய பாடல்கள் என்னை ஆக்கிரிமித்துக் கொண்டிருக்கிறது. அவர் உடல் மறைந்தாலும் பாடல்கள் மூலம் ஆன்மா ரசிகர்களிடம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது. பாடு நிலாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
|
தேன்குரல் மன்னன் என்ற பட்டத்தை பெற தகுதியானவர் எஸ் பி பி மட்டுமே . எந்த மொழியில் பாடினாலும் , அந்த மொழி உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர் . வெகு தூர பிரதேசங்களில் இருந்து வந்த புது பாடகர்களால் அவருடைய வாய்ப்புகள் குறைந்தபோது , அதைப்பற்றி கவலைப்படாமல் புதிய பாடகர்கள் தமிழை நன்கு உச்சரித்து பாட வேண்டும் என்ற கருத்தை துணிந்து சொன்னவர் .
எந்த நாயகனுக்கும் அவருக்கு ஏற்ற குரலில் பாடும் வன்மை கண்டவர் . அவரது ஆத்மா சாந்தி அடைக .... |
ஒரு நல்ல மனிதர் மறைவு ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
|
மிக பெரிய இழப்பு மீண்டு வருவேன் என சொல்லி ஏமாற்றி விட்டார் !! ஆழ்ந்த வருத்தங்கள்
|
சிகரம் தொட்ட மாமனிதர்.....அன்பும்,பண்பும்,பணிவும் மிக்க மாபெரும் இசைகலைஞனை இப்படி காலன் கொண்டு செல்வான் என்று நினைத்து பார்க்கவில்லை...பிறந்தவர் எல்லோரும் ஒரு நாள் இறக்ககூடும் என்ற புத்திக்கு தெரிந்த உண்மையை மனசு உணர மறுக்கிறது...
உதயகீதம் படத்தில் அவர் பாடிய வரிகள்..... ""இந்த தேகம் மறைந்தாலும்,இசையாய் மலர்வேன்.."" சென்று வாருங்கள் எஸ்.பி.பி... |
All times are GMT +5.5. The time now is 12:05 AM. |
Powered by Kamalogam members