சென்னையில் வெள்ளம் என்ற செய்தி கேட்டதும் காமலோக நண்பர்கள் சிலர், குறிப்பாக வெளி நாட்டில் இருப்பவர்கள், எனது நிலை பற்றியும் இதர காமலோக நண்பர்கள் நிலை பற்றியும் தொலைபேசி, மற்றும் தனி மடல் மூலம் விசாரித்தார்கள். பலமுறை முயற்சி செய்த பிறகு நண்பர்கள் ரஜேஷ், அநபாயன், நல்லவன், ஆகியோர்களுடன் பேச முடிந்தது. பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று
நிம்மதியடைந்தேன்.
வியாழன் 03-12-15 காலை நான் வெளியே சென்று பார்த்த சில காட்சிகள்:
அமைச்சர்கள் வசிக்கும் பகுதி கிரீன் வேஸ் ரோடு (பசுமை வழிச் சாலை) உட்பட எல்லாம் தண்ணீர் மயம். நான் எடுத்த ஒரு போட்டோ இதோ:
வி ஐ பி களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை ? பல கட்டிடங்களில் இரவு 10 மணிக்கு திடீரென்று வெள்ளம் வந்து தரை தளம் மூழ்கி, முதல் மாடியில் 1 அடி தண்ணீர் வந்து விட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் அவசரம் அவசரமாக மொட்டை மாடிக்கு சென்று இரவு பூராவும் காத்திருந்தர்கள்.
மலர் ஆஸ்பத்திரி அருகே உள்ள அடையாறு பாலம் மேல் நின்று பார்த்தேன். தண்ணீர் பாலத்தை தொடும் அளவுக்கு சென்று கொண்டிருந்தது. நீர் மட்டம் இன்னும் 1 அடி கூடினால் பாலத்தின் மேல் சென்று விடும். இரவு பாலத்தின் மேல் 1 அடி தண்ணீர் சென்றதாக அருகே இருந்தவர்கள் கூறினார்கள்.
மற்ற பாலங்கள், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, ஈக்காடுதாங்கல் ஆகியன, மக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு மூடப் பட்டன. காரணம் பாலத்தின் மேல் 2 அடி தண்ணீர் அதி வேகமாக செல்வதால் ஆபத்து என்று அறிவிக்கப் பட்டது. போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர். ஆபத்தான சாலைகளில் போக்கு வரத்து தடை செய்யப் பட்டிருந்தது.
எல்லா ரோடுகளிலும் ஆறு போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பாதுகாப்பு கருதி சென்னை நகர் பூராவுக்கும் 3 நாட்கள் மின்சாரம் சப்ளை துண்டிக்கப் பட்டது. ஜெனரேட்டர் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது. அதற்கும் பெட்ரோல் தட்டுப் பாடு. 5 பங்க் களில் பார்த்த போது 1 ல் மட்டுமே பெட்ரோல் கிடைத்தது. செல்போன்கள் வேலை செய்யவில்லை.
ரயில், பஸ், டாக்சி, ஆட்டோ எதுவும் 3 நாட்களாக இயங்கவில்லை. விமான நிலையமும் 3 நாட்களாக மூடப் பட்டது. ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும், பேரிடர் நிவாரண வாகனங்களும் ஆங்காங்கு சென்று கொண்டிருந்தன. பாதிக்கப் பட்ட மக்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், ரொட்டி, பிஸ்கட், போன்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் பல இடங்களில் இந்த வாகனங்களும் போக இயலாத அளவு தண்ணீர் இருந்தது. அங்கே படகு மூலம் விநியோகம் செய்ததாக கேள்விப் பட்டேன். அது கூட இயலாத பகுதிகளில் பாதிக்கப் பட்ட மக்கள் பட்டினிதான்.
மின்சாரம் நேற்று மாலை முதல் வந்தது. ஆனால் சாலைகளில் ஒரே டிராபிக் ஜாம். ஆங்காங்கு மக்கள் ஆர்ப்பாட்டம், மறியல் ! இப்போது மழை நின்று ஓரளவு சகஜ நிலை திரும்புகிறது ! இருந்தாலும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் மழை வருமென்று வானிலை அறிவிப்பு கூறுகிறது.